ஆலிலை
பத்திரன்கோட்டை, தென்காசி அருகே உள்ள சிறிய ஊர். ஊரே தேர்தல்
பரப்பரப்பிலும், கொரானா இரண்டாவது அலையின் பரப்பப்பிலும் இருக்க, தன்
உலகத்துக்கும் அதற்கும் சம்பந்த இல்லை என்பது போல், அந்த ஊரின்
வடபுறத்தில் அமைந்திருந்த ஆபத்து காத்த அம்மன் கோவிலின் சப்த மாத
சன்னிதியை வெறித்து பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள் ஸ்ரீஜா. ஸ்ரீஜா ஒரு தமிழ்
தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியின் க்ரியேட்வ் ஹெட். அவளுக்கு
சிறுவயதிலேயே அமானுஷ்யம், வரலாற்றில் ஆர்வம் அதிகம். அந்த
ஆர்வத்துடன் அவள் கற்பனை திறனும் இனைய 25 வயதிலேயே பிரபல
தொலைக்காட்சியின் ப்ரைம் ஸ்லாட் நிகழ்ச்சியின் க்ரியேட்வ் ஹெட் ஆக
முடிந்தது.அவள் தென்காசி வந்தது, வாரம் ஒரு அமானுஷ்யம் என்ற
நிகழ்ச்சிக்காக. தென்காசி மலையடிவாரத்தில் குடில் அமைத்து, கூடு விட்டு கூடு
பாயும் விந்தையான பரகாய ப்ரவேசத்தில் இருந்து அஷ்டமா சித்து வரை
தன்னால் செய்ய முடியும், கொரானாவிற்கு மருந்து இமயமலையில் உள்ளது,
அதை தன்னால் கண்டறிய முடியும் என உதார்விட்ட ஒரு சாமியாரை பேட்டி
எடுக்க. பேட்டியெல்லாம் எடுத்து முடித்து, அவள் ஊருக்கு கிளம்பும் நேரத்தில்
தான், முகநூல் வாயிலாக, தென்காசி பத்திரன்கோட்டையில் பாண்டிய
மன்னர்களின் மெய்க்காவல் வீரர்களாக இருந்த தென்னவன் ஆபத்துதவிகள்
வழிப்பட்ட காளி கோவில் அங்கு இருப்பதும், ஆபத்துதவிகளின் சிலை சப்த மாதா
என சொல்லப்படுவதும் அறிந்து, தன் பயணத்தை ஒருநாள் நீட்டித்து,
பத்திரன்கோட்டையில் வந்து உட்கார்ந்து இருக்கிறாள். நேரம் ஆக ஆக கேமரா
மேன் கார்த்திக் பொறுமை இழந்தான்.
“ எவ்வளவு நேரம் தான் அந்த சிலையை பார்த்துட்டு இருப்ப ஸ்ரீ? கிளம்பலாம்.
பார்டர் பரோட்டா சாப்பிட்டு வண்டியை ஊருக்கு விட வேண்டியது தான். ஷூட்
பண்ண புட்டேஜை எடிட்டிங் டேபிள் அனுப்பனும்”
“ கிளம்ப வேண்டியது தான். இந்த ஊர் காரங்க ஏழு சிலை இருக்கிறதால சப்த
மாதாக்கள் னு சொல்றாங்க. ஆனால் பாரு இவங்க கையில் வாள் வைச்சிருக்க
ஆண்கள். இங்கே கிணத்துல உள்ள கல்வெட்டு, தென்னவன் ஆபத்துதவிகள்
வழிப்பட்ட கோவிலுனு இந்த கோவிலை சொல்லுதாம்.”
“ சொல்லிட்டு போகட்டும். இப்போ உனக்கு எதுக்கு இந்த சரித்திர ஆராய்ச்சி?”
“ மீடியால இருந்துக்கிட்டு இப்படி பேசுற? இன்னும் பொன்னியின் செல்வன் மவுஸ்
மக்கள் கிட்ட எப்படி இருக்குனு சென்னையில் நடக்கிற புக்-ஃபேர் பார்த்து
தெரிஞ்சுக்கோ. ஆதித்த கரிகாலனை கொன்ன ஆபத்துதவிகள் சிலைனு போட்டா
எவ்வளவுரீச் ஆகும்.”
அவள் சொல்லி முடிக்கும் முன் ஒரு சிறு பெண் குரல் குறுக்கிட்டது.
“ ஆதித்தனை ஆபத்துதவிகள் கொல்லல. ஆபத்துதவிகள் வீரபாண்டியன்
கூடவே செத்துட்டாங்க. அது தான் அவங்க வழுதி குல ப்ரதிக்கை. நீங்கள் தப்பு
தப்பா ஊருக்கு கதை சொல்லாதிங்க. “
பின்வந்த குரலுக்குரியவள் யார் என்று திரும்பி பார்க்க எண்ணெய் வைத்து படிய
வாரி ஜடை போட்ட தலையுடன், கையில் ஆடு மேய்க்கும் தொரட்டி கம்புடனும்,
மினுமினுக்கும் அழகு கருப்பில், நெற்றி நிறைய குங்குமம் இட்டு, 14 வயது
மதிக்கத்தக்க பெண் சிவப்பு பாவடை சட்டையில் நின்று கொண்டு இருந்தாள்.
அவளது தோற்றமும் கருவண்டு விழிகளும் சற்று அமானுஷ்யமாக தான் பட்டது
ஸ்ரீஜாவிற்கு
“ யாரும்மா நீ. உனக்கு எப்படி ஆபத்துதவிகள் பற்றி தெரியும்?”
பயத்தை மறைக்க ஸ்ரீஜா அதட்டலாக கேட்டாள்.
“ நான் இந்த ஊர்காரிதான். உத்து உத்து பார்த்துக்கிட்டு இருந்தியளே அவுங்க தான்
தென்னவன் ஆபத்துதவிகள் னு எங்க அய்யா சொல்வாரு. அவுங்க 7 பேரும் வீரபாண்டியன் கூடவே இறந்துட்டதாகவும், நாங்க அவங்க வழி வந்தங்கனும்
சொல்வாரு அதான் சொன்னேன்.”
“ கொய்ட் இன்ட்ரஸ்ட்ங். உங்க அய்யானா தாத்தாவா? அவரை நாங்க
பார்க்கலாமா?”
“ தாத்தா தான். ஆனால் போன சித்திரையிலேயே கண்ண மூடிட்டார். அவரை
பார்க்கலாம் முடியாது”.
“ஓ. சாரி. எனக்கு இந்த ஆபத்துதவிகள் பற்றி தெரியனுமே. உங்க வீட்டில் வேற
பெரியவங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்களா?”
“ எதுக்கு டிவி பெட்டில போட்டு காசு பார்க்காவா?. இவுங்க எங்களுக்கு குலசாமி
மாதிரி. இவுங்கள பத்தி அதிகப்படியா பேச மாட்டோம். நீங்க இவுங்கள
கொலைக்கரவுங்க மாதிரி பேசவும் தான் அய்யா சொன்னதை சொன்னேன். உச்சி
உறுமுற நேரம் ஆச்சு. இங்கேல்லாம் ரொம்ப நேரம் இருக்க கூடாது. வெரசா ஊர
பார்க்க போங்க.”
சொல்லிட்டு அந்த பெண் பதிலை எதிர்ப்பார்க்காமல் சென்று விட்டாள். அந்த
பெண்ணின் தோரானையும் பேச்சும் வயதுக்கு மீறிய பெரிய மனுஷித்தனமாக
தோன்றியது ஸ்ரீஜாவிற்கு. அப்போது அங்கே மெல்லிதாக சூழற்காற்று போல் வீச,
மனதில் அமானுஷ்யம் கவ்வ, அங்கே இருந்து புறப்பட்டாள் ஸ்ரீஜா. கார் ஏறப்போன
சமயம் ஒரு ஆல் இலை வந்து முகத்தில் அறைந்தது. ஏனோ அதைப்
பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீஜாவிற்கு தோன்றியது.
ஊருக்கு வந்த பிறகு ஆதித்த கரிகாலன் மரணத்தை பற்றி சொல்லும்
உடையார்குடி கல்வெட்டை திருப்பி திருப்பி படித்து கொண்டு இருந்தாள்.
பனிதிரைக்கு பின் விலகும் காட்சி போல் அந்த நாளைய சரித்திர சம்பவங்கள்
அவள் முன் விரிய தொடங்கின.
ஆதித்தகரிகாலனை கொலைசெய்த மூவரின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளது.
கொலைக்கான காரணம் பற்றிய விபரம் கல்வெட்டில் இல்லை.
அம்மூவர்.
1. சோமன்...
சோமனின் தம்பி
2.இரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரமாதிராசன்.
இந்த ரவிதாசன் என்பவர் ஒரு சோழ அதிகாரி. அவரது பட்டமான பஞ்சவன்
என்னும் பெயரைக்கொண்டு இவரை ஒரு பாண்டிய ஆபத்துதவி என்றும்,
பாண்டியனது அமைச்சர் என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.இது
தவறான ஒன்று. பாண்டியர்களுடன் நடைபெற்ற போரில் பங்கேற்ற சோழத்
தளபதிக்கு பஞ்சவன் என்னும் விருதுப்பெயர் வழங்கப்படும். பஞ்சவன்
என்னும் பெயர் கொண்ட ஏராளமான சோழ அதிகாரிகள் உண்டு.
இராஜராஜனின் தளபதிகளில் ஒருவரது பெயர் கூட பஞ்சவன் மாராயன்
என்று இருக்கிறது.
ஆகவே, பஞ்சவன் ரவிதாசன் என்பவர் சோழநாட்டு அதிகாரிதான். பாண்டியர்
அல்ல.
குற்றவாளியான மூன்றாம் நபர்..
இருமுடிச் சோழ பிரமாதிராசன் பரமேஸ்வரன். இவரும் ஒரு சோழ உயர்
அதிகாரி... சோழ பிரமாதிராசன் என்னும் விருதுபெயர் கொண்ட ஒரு அதிகாரி.
பிரமாதிராசன் என்னும் விருதுப்பெயர் இருப்பதால் இவர்கள் மூவரும்
அந்தணர்கள்.
இம்மூவரும்தான் கரிகாலனைக் கொன்ற சோழ அதிகாரிகள்...இந்த இரவிதாசன் மனைவி நீலி, உடையார்குடி மகாதேவருக்கு ஆதித்த
கரிகாலன் தாத்தா பராந்தக சோழன் காலத்திலேயே நிவந்தம் விட்ட
கல்வெட்டையும் கவனித்தாள். அதில் கிரமவித்தனான இரவிதாசன் என்று
இருந்தது. கிரமவித்தன், கிரமமாக வேதம் ஓதும் அந்தனர். அப்படியானால்
தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் சம்பந்தம்
இல்லையா?. புதின தரவுகள் அந்த தென்பாண்டி வீரர்களை ஆயிரம் ஆண்டுகள்
கடந்தும் முதுகில் குத்தி பழி தீர்த்த கொடூரர்களாக காட்டியது குறித்து அவளுக்கு
வருத்தம் ஏற்பட்டது. இதை குறித்து கண்டிப்பாக ஒரு நிகழ்ச்சி தயாரிக்க
வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. இருப்பினும் இன்னும் கொஞ்சம் பில்ட்
வர்க் தேவை என்ன பட்டதால் மீண்டும் தென்காசி நோக்கி கிளம்பினாள் ஸ்ரீஜா.
உடன் கேமரா மேன் கார்த்திக். டிரைவர் ஷங்கர்.முதலில் திருச்சியில், சோழர்
வரலாற்று ஆய்வு மையம் நடத்தி வரும் செம்பியன் செல்வனை திருச்சியில்
சந்தித்து வரலாற்று தரவுகள் குறித்து தெளிவு ஏற்படுத்தி கொண்டு, தென்காசி
பத்திரன் கோட்டை செல்லலாம் என திட்டமிட்டு இருந்தாள். வண்டி தாம்பரம்
தாண்டி வேகம் எடுத்தது. தான் வாழ்நாளில் இதுவரை சந்தித்து அறியாத பயங்கர
அனுபவங்களுக்கு ஆளாவோம் என ஸ்ரீஜாவிற்கு அப்போது தெரியாது.
வண்டி பெரம்பாலூர் சிறுவாச்சூர் பத்திரக்காளி அம்மன் கோவிலை கடந்தது.
அப்போது ஒரு நாய் குறுக்கே பாய, வண்டி டிவைடர் மேல் மோதி, பின்
இருக்கையில் சீட் பெல்ட்
போடாமல் அமர்ந்து இருந்ததால் , ஸ்ரீஜாவின் தலை
முன்னிருக்கையில் மோதி, நெற்றியில் உதிர பாம்பு சீற்றம் எடுக்க தன் வயம்
இழந்தாள் ஸ்ரீஜா. முன்னிருக்கையில், கார்த்திக், ஷங்கர் இருவரும் சீட் பெல்ட்
அனிந்து இருந்ததால், பெரிய காயம் இல்லாமல் தப்பித்தார்கள்.
பின்னிருக்கையில் ரத்த விளாராக ஸ்ரீஜாவை கண்டு பதறி, உடனடியாக
ஆம்புலன்சை அழைத்தான் கார்த்திக். பெரம்பாலூர் அரசு மருத்துவமனை அவசர
சிகிச்சை பிரிவில், உடனடியாக அனுமதிக்கப்பட்டாள் ஸ்ரீஜா. தகவல் அறிந்து
ஸ்ரீஜாவின் பெற்றோரும் உடனடியாக பெரம்பாலூர் வந்துவிட்டனர். நெற்றி
பொட்டில் ஏற்பட்ட பிளவு, மூளை மிதக்கும் திரவத்தை வெளியெற்ற, அதை
உடனடியாக சரிசெய்ய வேண்டிய அவசரத்தில் அவளை அறுவை சிகிச்சை
அறையில் மருத்துவர்கள் அனுமதித்தார்கள். அவர்கள் ஸ்ரீஜாவிற்கு கபால
சிகிச்சையை ஆரம்பிக்க, அவள் ஆழ்மன எண்ணங்களில் ஸ்ரீஜா பயணிக்க
ஆரம்பித்தாள். அவள் இப்போது ஸ்ரீஜா இல்லை. தேவியம்மாள் அப்படி தான் அந்த
கரிய மனிதன் அவளை அழைத்தான். “உன் பெரியப்பாவை கொன்ற சதியில்
பாண்டியர்களுக்கு சம்பந்தம் இல்லை. இது ராஜாத்திதர் அன்னை
கோக்கிழானடிகள் உடன் வந்து சோழ தேசத்தில் தங்கிய சேர தேச அந்தணர்கள்
வேலை தேவியம்மாள். பின்னிருந்து முதுகில் குத்துவது பாண்டியருக்கு
இழுக்கு. வீரப்பாண்டி தேவர் இறந்தவுடன் அவரை காப்பாற்ற முடியாத
சோகத்தில் அவரது ஏழு தென்னவன் ஆபத்துதவிகள் கழுத்தறுத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு அவர்களின் மாறனாதிச்சன் வகையறாவை சேர்ந்த மக்கள் ,
தென்பாண்டி நாட்டில் குறும்பொறை நாட்டில் நடுக்கல் வைத்து வருஷப்பலிசடங்கு செய்து வருக்கின்றார்கள். இது பாண்டியர் செயலல்ல. விதியின் சதி
“என்று கண்ணீர் உகுந்து நின்ற அந்த கரியமனிதனை அழைத்துக் கொண்டு,
தேவியம்மாளாக இருந்த ஸ்ரீஜா மலைசாரல் பொங்கும் குற்றால நாதர் சந்நிதி
கடந்து , அடர்ந்த வனத்திற்குள் செல்வது ஆழ்மனத்தின் காட்சிகளாக விரிந்தது.
அந்த வீரர்களின் நடுக்கல் சிலையை 1000 குடங்கள் தண்ணீரால் நீராட்டி
கைக்கூப்பி நின்றதும், அப்போது அங்கே திடும்மென பிரவேசித்த ஆகிருதியான
மனிதரை கண்டு அப்பா.. அப்பா, என அழுததும் நினைவலைகளில் அழுத்த,
ஸ்ரீஜாவின் உதடுகள் அப்பா அப்பா என அனிச்சையாக முனுமுனுக்க, மருத்துவர்
மயக்கவியல் மருத்துவரை நோக்க, க்ளோரபார்ம் டோஸேோஜ் ஆக்சிஜன் உடன்
சேர்ந்து நீஜாவை நினைவுகளே இல்லாத ஆழ்ந்த அமைதிக்கு கொண்டு
போயிற்று.
கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தாள் ஸ்ரீஜா. அன்று மருத்துவமனையில் இருந்து
டிஸ்ஜார்ஜ் ஆக வேண்டிய நாள். தொலைக்காட்சி தரப்பில் இருந்து, உடல்நலம்
தேறிய பின் அடுத்த ப்ராஜக்டை பார்த்துக் கொள்ளலாம் என சொல்லப்பட்டது.
இப்போது ஸ்ரீஜாவிற்கு தேவை ஓய்வு என்று அறிவுறுத்தப்பட்டது. கார்த்திக்,
ஸ்ரீஜாவின் பெற்றோருக்கு உதவிக் கொண்டு இருந்தான். அறுவை சிகிச்சை யின்
போது ஏற்பட்ட ஆழ்நிலை நினைவுகள் ஸரீஜாவை முழுவதும் ஆக்ரமித்து
இருந்தன. ஏதோ ஒரு வகையில் அந்த தென்காசி தென்னவன் ஆபத்துதவிகள்
நடுக்கலை எப்போதோ பார்த்து வணங்கி இருக்கின்றோம் என ஸ்ரீஜாவிற்கு
தோன்றியது. அங்கே சென்று வணங்கிவிட்டு ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்தாள். ஆனால் ஸ்ரீஜாவின் அம்மா ஓப்புக்கொள்ளவில்லை. அவளை
பொறுத்தவரை ராஜராஜ சோழன் விஷயம் எல்லாமே அமானுஷ்யம் தான்.
அதனால் இந்த கதையில்லாம் விட்டுட்டு, ஊருக்கு செல்லலாம் என கூறினாள்.
ஸ்ரீஜா தன் முடிவில் உறுதியாக நிற்க, அப்பொழுது அவளை பார்க்க அந்த
மருத்துவமனையில் உள்ளே நுழைந்தார் செம்பியன். வரலாற்று ஆய்வாளர்
என்றார்கள். வீபூதி பட்டையும் ருத்திராக்ஷமுமாக சிவப்பழமாக இருக்கின்றாரே.
செம்பியன் ஸ்ரீஜாவிற்கு அருகே நாற்காலியை நகர்த்தி போட்டு அமர்ந்தார்.
“ இப்போ தேவலாமா அம்மா?”
“ பரவாயில்லை சார். நானே உடையார்குடி கல்வெட்டு பற்றி உங்க கிட்ட
பேசலாம்னு இருந்தேன்.”
“ அந்த கல்வெட்டுல ஓன்னும் இல்லம்மா. ஆதித்த கரிகாலனை கொன்னவங்கனு
ஒரு மூனு பேரை சொல்லுது. அந்த மூனு பேர் மட்டும் தானா வேறு யாராவது
சம்பந்தப்பட்டு இருக்காங்களா? கொலைக்கான காரணம் என்ன? இது பத்தி எதுவும்
அந்த கல்வெட்டு சொல்லல. ஆனால் மனுஷ மனசு இருக்கே அது ஒரு
பிரமாண்டமான படைப்பு இயந்திரம். அந்த கல்வெட்டில் வந்த ஒரு வரியை
பிடிச்சுக்கிட்டு எத்தனை எத்தனை கதைகளும் காரணமும் இந்த படைப்பாளிகள்
உருவாக்குறாங்க இல்லை. ஒரு வேளை ராஜராஜரும் ஆதித்த கரிகாலனும்,வீரப்பாண்டியனும் திருப்பி வந்தால், இந்த கதைகள் படித்து விட்டு சிரிப்பாங்க
இல்லை என்று நிறுத்தி , அவர் வெடி சிரிப்பு சிரித்தார்.
ஓரு வரலாற்று ஆய்வாளர் ஆக ஆதித்தன் கரிகாலன் கொலைக்கு என்ன
காரணம் இருக்க முடியும்னு நினைக்கிறிங்க சார்?”
“ ஒரு ஆய்வாளரா என்னால் எந்த கருத்துமே சொல்ல முடியாது.என்ன ஒரு
ஆய்வாளர் முழுமையான தரவுகள் உடன் தான் பேச முடியும். இந்த விஷயத்தில்
முழுமையான கல்வெட்டு தரவுகள் கிடைக்கலை.ஆர்வலரா யூகிக்கனும் ன
வீரப்பாண்டியன் மேல் அன்பு கொண்டவங்க செஞ்சு இருக்கலாம்.”
“அன்பு அழிக்கவும் செய்துள்ள சார் “என சிரித்தாள் ஸ்ரீஜா.
“ஆப்கோர்ஸ் ஒரு வட்டத்துகுள் குறுகிய அன்பு, அழிக்கவும் செய்யும்”
“அப்போ இது ஆபத்துதவிகள் செயலா சார்?”
“ தென்னவன் ஆபத்துதவிகள் மன்னரை காப்பாற்ற முடியாவிட்டால் தங்களை
அழித்து கொள்வதாக சபதம் ஏற்றவங்க. அதனால் வீரப்பாண்டியன் உடன் அவங்க
இறந்து போயிருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் வீரப்பாண்டியன் மேல் அன்பு
கொண்ட வேறு யாராவது இதை செய்துருக்கலாமே. இந்த விஷயத்தில் ஆதித்த
கரிகாலனும் மூர்க்கமாக தான் நடந்துக்கிட்டான். விழுப்புரம் அருகே ஏசாலம்
கிட்ட கிடைச்ச கல்வெட்டு, விீரப்பாண்டியன் தலையை ஈட்டியில் சொருகி, ஒரு
மண்டலம் தஞ்சை கோட்டை வாசலில் சொருகி வைத்திருந்தாக சொல்லுது.
அந்த
காலத்தில் தஞ்சாவூரில் பாண்டி நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவங்க
நிறைய பேர் இருந்தாங்கம்மா. பாண்டி வேழம் என்றே ஒரு தெரு தஞ்சையில்
இருந்தது. அவங்களுக்கு வலிச்சு இருக்கும் இல்லியா? அவ்வளவு ஏன் அந்த
கல்வெட்டுகளில் கண்ட மூன்று அந்தனருக்கும் வீரப்பாண்டியனுக்கும் கூட நட்பு
இருந்து இருக்கலாம். வீரப்பாண்டியனின் கொடூர சாவு , இப்படி பழிவாங்க
வைச்சிருக்கலாம். எல்லாமே அனுமானம் தான். ஆதாரம் ஓன்னும் இல்லை.சரி
இதை விடு மனுஷன் என்னிக்கு ஓத்துமையா இருந்துருக்கான். இந்த பூமியோட
வரலாறு சண்டையுலையும் யுத்தத்திலயும் தானே எழுதப்பட்டூருக்கு. இந்த
யுத்தத்தையும் இரத்தத்தையும் நீ ஏன் இன்னும் கீறிக்கிட்டு இருக்க? இதுல
அழுத்தமாக கொண்டாடப்பட வேண்டியது அந்த தென்னவன் ஆபத்துதவிகள்
தியாகம் தான். வீரப்பாண்டியன் அப்பா இராஜசிம்மன் காலத்திலேயே மதுரையை
இழந்தாச்சு. நாடு இழந்து, காட்டில் மறைச்சு வாழ்ந்தாலும் அவன் எனக்கு மன்னன்
தான். அவனுக்கு கொடுத்த சத்தியத்தில் நிற்பேன். அதை நிறைவேற்ற முடியாட்டி
உயிரையும் கொடுப்பேனு சத்தியத்தில நின்னாங்களே , அவங்கள பத்தி பேசு;
அவங்கள பத்தி எழுது. இந்த உலகத்தை இனைச்சு காட்டி இருக்கிற கயிறு
சத்தியம் தான். சத்தியத்தில் நின்ன மனுஷன் காலம் கடந்தும் நிப்பான். ரொம்ப
நேரம் எடுத்துக்கிட்டேன் ரெஸ்ட் எடு” என்று விடைப்பெற்றார். புரிந்தும் புரியாமல்
அவர் சென்ற திசையை பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீஜா வின் கரங்களில் அவளது கைப்பையை கொடுத்து, விபத்தில் தொலைந்துவிட்ட பையை போலீஸ் தேடி
கொடுத்ததாக சொல்லி கொடுத்தாள் ஸ்ரீஜாவின் அம்மா.
“ எல்லாம் சரியா இருக்கானு பாரும்மா”
ஸ்ரீஜா திறந்து பார்த்தாள். அதனுள் சருகாக அன்று பத்திரன் கோட்டையில் அவள்
தலையில் விழுந்த ஆலம் இலை. முகத்தோடு அந்த இலையை வைத்து
அழுத்திக் கொண்டாள். உங்கள் சத்தியம் தவறாத பேராண்மையை கண்டிப்பாக
எழுதுவேன் என முனுமுனுத்து கொண்டே, அதன் ஆயிரம் வருட வாசத்தில்
கரைத்து போனாள் தேவியம்மாள் ஆன ஸ்ரீஜா.
Comments
Post a Comment