கார்ல்மார்க்ஸ் பிறந்தநாள்
இன்று காரல் மார்க்ஸின் 203 வது பிறந்தநாள். அவரின் மூலதனம் ( Das Capital) என்ற நூலை படிக்காமல், இளங்கலைப் பொருளாதார படிப்பை நிறைவு செய்ய முடியாது. மூலத்தனம் என்பது தொழிலுக்கான முதல், கருவிகள் ஆகிய சேமிப்பு குவியல் என முதலாளித்துவ வல்லுநர்கள் வரையறுத்த போது, " மூலதனம் என்பது வரலாற்று ரீதியான இனம் " என்ற புதிய விளக்கம் அளித்தவர் காரல் மார்க்ஸ். உழைப்பு சக்தி ஓரு பண்டமாக மாறும் போது, உற்பத்தி சாதனங்களை கொண்ட முதலாளியும், உழைப்பை தவிர வேறு எதுவுமே உடைமையாக இல்லாத கூலி தொழிலாளியும் சமூகத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் போது மட்டுமே மூலதனம் தோன்றுகின்றது என மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். முதலாளித்துவம் வேறோடி போன 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் தொழிலாளரின் குரலை ஓங்கி ஒலித்தது காரல் மார்க்ஸின் குரல். மார்க்ஸின் குரலுக்கு வலு சேர்த்தது அவரின் நன்பர் ஏங்கல்ஸின் கரம். மரணம் தாண்டியும் தன் நன்பருக்கு துணையாக நின்றார் ஏங்கல்ஸ். மார்க்ஸ் மரணத்திற்கு பின் இறுதி காரியங்கள் செய்த பிறகு, அவரின் இரு மகள்களுக்கு தன் சொத்துக்களை உயில் எழுதி வைத்தார்.
மார்க்ஸை நினைக்கும் போது ஜென்னியை நினைக்காமல் இருக்க முடியாது. எரிமலையாக புரட்சிகர கருத்துக்கள் பூத்த மார்க்ஸின் நெஞ்சில் பனி மழையாக உள்ளே நுழைந்தவள் ஜென்னி. யூதரான மார்க்ஸ் மீது ஜெர்மானிய நிலபிரபு குடும்பத்தை சேர்ந்த ஜென்னிக்கு காதல் மலர்ந்தது இலக்கியத்தால் தான். ஷேக்ஸ்பியரின் எழுத்துக்கள் என்றால் மார்க்ஸூக்கு பெரு விருப்பம். குடும்ப நண்பராக அறிமுகமான மார்க்ஸ் மீது ஜென்னிக்கு ஈர்ப்பு ஏற்பட காரணமும் மேற்சொன்ன ஷேக்ஸ்பியர் மீதான பெரு விருப்பம் தான். ஜென்னி மார்க்ஸிக்காக எத்தனையோ இழந்தாள். தன் இரு குழந்தைகளின் உயிரையும் கூட வறுமைக்கு பலி கொடுத்தாள். எவ்வளவு இடர் வந்த போது அவள் மார்க்ஸை வெறுத்தது இல்லை. மீண்டும் ஓரு பிறவி எடுத்தாலும் மார்க்ஸ் மீதான காதலுடனே இருக்க வேண்டும் என்று நினைத்தாள். வரலாற்றின் பக்கங்களில் நான் ரசித்த காதலின் அடர்த்தி அது.
கார்ல் மார்க்ஸ் பிறப்பில் வறியவர் இல்லை. அப்போது அவர் பெற்ற சட்ட கல்வியே அவருக்கு வசதியான வாழ்க்கையை அமைத்து தந்திருக்கும். அவர் மனைவி ஜென்னியும் நண்பர் ஏங்கல்ஸூம் கூட வசதியான பின்புலம் கொண்டவர்கள் தான். ஆனால் அவர் முன்வைத்த சித்தாந்தத்தை ஏற்க முடியாத அந்நாளைய மேற்குலகம் அவரை வறுமையின் கோரபிடிக்குள் தள்ளியது. ஆனால் என்ன இறப்பை தவிர வேறு எதுவும் அவரது சிந்தனையை நிறுத்த முடியவில்லை. காலம் கடந்தும் அவரது கோட்பாடுகள் மானிட நலனுக்கு வழிக்காட்டும் நாட்சத்திரங்களாக பொருளாதார வானில் என்றும் ஜொலித்துக் கொண்டே இருக்கும்.
கார்ல்மார்க்ஸ்_203வது_பிறந்தநாள்.
Comments
Post a Comment